மத்தியஅரசு அறிவித்த செல்லாத ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய நேற்றுடன் கடைசி நாள் என்பதால், நேற்று ஒருநாள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட செல்லாத ரூபாயின் மதிப்பு குறித்து வங்கிகள் அறிக்கை அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “ டிசம்பர் 30-ந் தேதியோடு ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை டெபாசிட் செய்யும் காலக்கெடு முடிகிறது. கடைசிநாளான 30-ந் தேதியன்று வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட செல்லாத ரூபாயின் மதிப்பு குறித்து வங்கியின் வேலை நேரம் முடிந்தபின், அதிகாரிகள் அது குறித்த அறிக்கையை மின் அஞ்சல் மூலம் ரிசர்வ் வங்கிக்குக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் டெபாசிட் செய்யும் தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், கிராம, கூட்டுறவு வங்கிகள் ஆகியவை எவ்வளவு செல்லாத ரூபாயை டெபாசிட் செய்கின்றன உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற வேண்டும். செல்லாத ரூபாயை சனிக்கிழமையன்று, அந்தந்த வங்கிகளுக்குரிய கரூவூலத்தில் செல்லாத ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். அதேசமயம், செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கியின் இருப்பு விவரத்தில் கொண்டு வர முடியாது'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.