Removal of Taj Mahal from Tourist Centers list
உலகின் 7-வது அதிசயமான தாஜ்மகாலை, சுற்றுலா மையங்கள் பட்டியலில் இருந்து உத்தரபிரதேச அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் யமுனை ஆற்றின் கரையில் தாஜ்மகால் அமைந்துள்ளது. இது சர்வதேச அளவில் 7-வது உலக அதிசயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உலகிலேயே காதலுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய மாளிகை என்ற சிறப்பு தாஜ்மகாலுக்கு உண்டு. ஆனால், தாஜ்மகால் குறித்து பல்வேறு கருத்துகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறப்பட்டு வருகிறது. தாஜ்மகால் கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கெனவே அங்கே ஒரு சிவன் கோயில் இருந்தது; அதைத்தான் தாஜ்மகாலாக மாற்றியுள்ளார் என்று ஒரு சாரரும், இல்லை என்று ஒரு சாரரும் கூறி வருகின்றனர்.
தாஜ்மகால் குறித்து அப்போதைய பிரிட்டிஷ் அரசு அதாவது 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி, தாஜ்மகால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்றும், தாஜ்மகால் பகுதியில் சிவன் கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில், தாஜ்மாகால் பகுதியில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
தாஜ்மகாலை பார்ப்பதற்காக வெளி நாடுகளில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டினர் மட்டுமல்ல; இந்தியாவில் இருந்தும் மக்கள் தாஜ்மகாலைக் கண்டு ரசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தாஜ்மகாலைக் காண வருகின்றனர்.
இந்த நிலையில், தாஜ்மகால் சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச அரசு இன்று சுற்றுலா மையங்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் தாஜ்மகால் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, இந்தியா மட்டுமல்ல, வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தாஜ்மகால் குறித்து வரலாற்று ஆசிரியர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினர் வெவ்வேறு வகையில் வர்ணித்துள்ளனர்.
தாஜ்மகால் பற்றி விவேகானந்தர் கூறும்போது, இங்குள்ள சலவைக் கல் துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால், அதில் இருந்து கூட அந்த அரசனின் காதலும், சோகமும் சொட்டும் என்று கூறியிருப்பார். மேலும், இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாடைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கும் ஆறு மாதமாவது தேவைப்படும் என்று விவேகானந்தர் கூறியிருப்பார்.
