இந்தியாவின் பல மாநிலங்ககளில் கனமழை கொட்டி வருகிற்து. குறிப்பாக மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் கேரளாவை  கனமழை புரட்டி எடுத்து வருகிறது. பெரும் மழையின் காரணமாக கேரளா மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடைவிடாத மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கோலாபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருப்பிடம் இன்றி கடும் மழையால் தவித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதேபோல் கேரளாவிலும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் திரிச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் மிக அதிகன மழைக்கும், வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது.