ரகுராம் ராஜனுக்கு மாநிலங்கள் அவை எம்.பி. பதவி - ஆம் ஆத்மி கட்சி திட்டம்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு மாநிலங்கள் அவை எம்.பி. பதவி வழங்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அவரின் கருத்துக்களை அறிய கடிதமும் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். இவரின் காலத்தில் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. நாட்டின் அன்னியச்செலாவணி கையிருப்பு அதிகரித்தது, அமெரிக்க டாலருக்கு நிகராண ரூபாய் மதிப்பும் உயர்ந்தது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு தொடர்பான மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் சில மாதங்களுக்கு முன் ரகுராம் ராஜன் தன் பதவிகாலம் முடிந்தது. அமெரிக்காவின் சிக்காக்கா பல்கலையில் தனது கல்விப்பணியை தொடர ரகுராம் ராஜன் சென்றார். அவர் சென்றபின்பும், சர்வதேச அளவில் அவர் தொடர்பான பேச்சு பேசப்பட்டு வந்தது.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோதும் ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்தில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, அமெரிக்க பெடரல் வங்கி தலைவராக சரியான நபர் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இந்நிலையில், இப்போது, மாநிலங்கள் அவை எம்.பிக்கு ரகுராம் ராஜனை நியமிக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 3 எம்.பி. இடங்கள் காலியாகின்றன. அதில் அரசியல் கலப்பு இல்லாத வேறு துறையில் இருந்து ஒருவரை நியமிக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், “சமீபத்தில் நடந்த ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில், எம்.பி. பதவி குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் அரசியல் சாராத ஒருவரை நியமிக்கலாம் என்று பேசப்பட்டதுபோது, அதற்கு ரகுராம் ராஜனை நியமிக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ரகுராம் ராஜனுக்கும் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தனர்.
மேலும், எம்.பி. பதவியை ரகுராம் ராஜன் ஏற்கும் பட்சத்தில் 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிகமான மக்களைக் கவர இது நல்ல நடவடிக்கையாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.