சாக்லேட் பழுப்பு கலரில் புதிய பத்து ரூபாய்! ஆர்.பி.ஐ. திட்டம்!
புதிய பத்து ரூபாய் நோட்டுகளை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய பத்து ரூபாய் நோட்டுகள் சாக்லேட் பழுப்பு வண்ணத்தில் இடம் பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பத்து ரூபாய் நோட்டுகளில் கோனார்க் சூரியனார் கோயிலின் படம் இடம் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின், ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் ஒரு பில்லியன் புதிய பத்து ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் பத்து ரூபாய் நோட்டு 2005 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அரசு ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. சென்ற வருடம் 2017 ஆகஸ்ட் மாதத்தில் 200 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 10 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய வண்ணத்தில் பத்து ரூபாய் நோட்டுகள் வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.