Asianet News TamilAsianet News Tamil

மரம் ஏறத் தெரிந்தால்தான் ரேஷனில் பொருள்… வரிசையில் நிற்கும் மக்கள்

Rajasthan Udaipur district knows the climb to the tree of the local people ration
ration shop-in-rajasthan
Author
First Published Mar 3, 2017, 3:57 PM IST


ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் மரம் ஏறத் தெரிந்தால்தான் அப்பகுதி மக்களுக்கு ரேஷனில் பொருட்கள் கிடைக்கிறதாம். இதனால், வயது வித்தியாசமின்றி, ஆண்களும், பெண்களும் மரம் ஏறி வருகின்றனர்.

முதல்வர் வசுந்தரா

ராஜஸ்தான் மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக வசுந்தராராஜே இருக்கிறார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம்

மக்களுக்கு எளிதாக ரேஷனில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது. ஸ்மார்ட் கார்டு மூலம், ‘பாயின்ட் ஆப் சேல்’ எந்திரம் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

மரத்தின் உச்சியில்

ஆனால், உதய்பூர் மாவட்டத்தின் எல்லை ஓரப்பகுதி கிராமங்களில் ‘இன்டர்நெட்’டுக்கு டவர்கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. இதனால், ‘டவரில் சிக்னல்’ கிடைத்தால் மட்டுமே ‘பாயின்ட் ஆப் சேல்’ எந்திரம் இயங்கும். ஆதலால்,  ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள்.

மரமும் மக்களும்

அவர்களைச் சந்தித்து, கைவிரல் ரேகை வைத்து, ‘பாயின்ட் ஆப் சேல்’ எந்திரத்தில் ‘ஸ்வைப்பிங்கார்டு’ மூலம் பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வாங்க, மக்கள் மரம் ஏறித்தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இதனால், உதய்பூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் ஆண்களையும், பெண்களையும், கூட்டம் கூட்டமாக மரத்தின் கீழ் மணிக்கணக்கில் மக்கள் காத்திருப்பதை காண முடியும். ரேஷன் கடை ஊழியர்கள் ‘டவர்’ கிடைத்துவிட்டது என்று கூறியவுடன் வரிசையில் நிற்கும் ஆண்கள் பெண்கள், மரத்தில் ஏறி, ரேகை வைத்து, ‘ஸ்மார்ட் கார்டை ஸ்வைப்பிங்’ செய்து இறங்கி விடுகிறார்கள். அதன்பின் பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள்.

மிக மோசம்

உதய்பூர் மாவட்டத்தில் மொத்தம் 76 ரேஷன் கடைகள் இருந்தாலும், அதில் 13 கடைகளுக்கு ‘இன்டர்நெட்’ இணைப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. 

தண்டனை பகுதியா?

இது குறித்து ரேஷன்கடை ஊழியர் ஒருவர் கூறுகையில்,“  உதய்பூர் மாவட்டத்தின் கோட்ராபகுதியில் அடிப்படை வசதிகளும், ‘இன்டர்நெட்’ வசதியும் பெரும்பாலான கிராமங்களுக்கு இல்லை. இந்த சூழலில் எப்படி நாங்கள் ‘பாயின்ட் ஆப் சேல்’ எந்திரம் மூலம் ரேஷன் பொருள் கொடுக்க முடியும். தவறு செய்பவர்களுக்கு தண்டிக்கும் இடமாக கோட்ரா பகுதி மாறிவிட்டது'' என்றார்.

அடிப்படை வசதியில்லை..

காட்ரா பகுதி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “ மக்களுக்கு மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்களை ‘டிஜிட்டல்’ முறையில் வழங்க கட்டமைப்பு இல்லை. எதையும் முன் ஏற்பாடாக செய்யாமல் எப்படி இதெல்லாம் சாத்தியமாகும்? ’’ என்கிறார்

 

Follow Us:
Download App:
  • android
  • ios