rajeev kumar appointed as deputy chief of nidhi ayog

நிதி அயோக் அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றிய அரவிந்த பனகாரியா ராஜினாமா செய்ததையடுத்து, புதிய துணைத் தலைவராக பொருளாதார வல்லுநர் ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் திட்டக் குழுவுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றார். துணைத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய-அமெரிக்கரான பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளாக நிதி ஆயோக் அமைப்பின் பணிகளை கவனித்து வந்த அரவிந்த் பனகாரியா, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தன்னை பதவியில் இருந்து விடுவிக்கும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

தான் பணியாற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதல் காலம் விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் தான் ராஜினாமா செய்வதாகவும் பனகாரியா குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. 

இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்புன் புதிய துணைத்தலைவராக பொருளாதார வல்லுநர் ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரான வினோத் பால், நிதி ஆயோக்கின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.