விடை பெற்றார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் !! பணிக்காலத்தில் இன்று கடைசி நாள் !!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது பணிக்காலம் இன்றுடன் நிறைவடைவதையடுத்து அவருக்கு நீதிமன்ற வளாகத்திலேயே பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நீதிமன்றமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் ரஞ்சன் கோகாய். இவர் தனது பதவி காலத்தில் அயோத்தியா, ரபேல், சபரிமலை விவகாuம் உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் தலைமை நீதிபதியின் பதவிக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (நவம்பர் 17) நிறைவடைகிறது.
ஆனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் இன்று அவரது பணிக்காலத்தின் கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் ரஞ்சன் கோகாய்க்கு இன்று பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள சரத் அரவிந்த் பாப்டே மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாயை வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் டெல்லியில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.