தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரயில்வே !! மத்திய அரசு அதிரடி முடிவு !!
சுற்றுலா வழித்தடங்கள் மற்றும் நெரிசல் குறைவாக உள்ள பகுதிகளில் தனியார் ரயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தீவிரமாக திட்டம் வகுத்து வருகிறது. அடுத்த 100 நாட்களில் தனியார் நிறுவன ரயில்கள் இயக்கத்திற்கான அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் இந்த தனியார் பயணிகள் ரயில்கள் இயக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.
சோதனை முயற்சியாக 2 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இருப்பினும் டிக்கெட் விற்பனை போன்றவை ஐஆர்சிடிசியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஆண்டு குத்தகை கட்டணம் அடிப்படையில் தொகை அளிக்கப்படும்.
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில்களை இயக்குவது தொடர்பாக வர்த்தக சங்கங்களுடன் ஆலோசிக்கப்பட்ட பிறகு, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் புக் செய்யும் மற்றும் ரயில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு மானிய விலையில் டிக்கெட் பெறும் திட்டத்தையும் ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. வர்த்தக சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இந்த திட்ட அறிக்கை அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுக்கிறது.
ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ரயில்வே சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தற்போது ஒரு சில வழத்தடங்களில் மட்டும் தனியார் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கும் மததிய அரசு காலப் போக்கில் அனைத்து தடங்களையும் தனியாருக்கு தாரை வார்த்துவிடும் என குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் ரயில்வே நல்ல லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதை தனியாருக்கு விடக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.