ரெயில்வேத் துறை தனியார்மயமா? மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பரபரப்பு பேட்டி
சமானிய மக்கள் அதிகமாகப் பயணிக்கும் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுமா என்பதற்கு மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மத்திய ரெயில்வேஅமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது-
சாத்தியம் இல்லை
இந்தியாவில் ரெயில்வே துறை எப்போதும் தனியார்மயம் ஆக்கப்படாது. சாமானிய மக்களின் அனைவரும் பயணிக்கும் ஒரு போக்குவரத்து ரெயில்வே. இதில் சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் அதேசமயம், சில சுமைகளும், பொறுப்புகளும் இருக்கிறது.
ரெயில்வே துறையை தனியார்மயமாக்கிவிட்டால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும் எனக் கூற முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அனுக வேண்டும்.
யார் வாங்குவார்கள்?
உலகில் சில நாடுகளில் ரெயில்வே தனியார் மயமாக்கப்பட்டு இருக்கிறது. அரசு நிறுவனத்தை வாங்குவதற்கு யார் தயாராக இருக்கறார்கள்? பொதுமக்கள் சேவை, நோக்கத்தில் எந்த தனியார் நிறுவனமும் ரெயில்வே துறையை வாங்குவதற்கு முன்வரவில்லை.
தனியார் விமான நிறுவனங்கள் விவசாயிகளுக்காக சிறப்பு சேவை இயக்குவார்களா? நாம் ரெயிலில் பயணிக்கும் மக்கள் குறித்தே கவலை கொள்கிறோம்.
மக்களின் நலன்
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் சேவை என்பது ஒவ்வொருவிதமாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை சாமானிய மக்களின் நலன்களை ஒதுக்க முடியாது. அவர்களுக்காக பணியாற்ற வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் கோடி வரை பயணிகள் போக்குவரத்துக்காக நாம் செலவிட்டு வருகிறோம்.ஆனால், சரக்குப்போக்குவரத்தின் லாபத்தில் இருந்து தான் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு என்பது ரெயில்வே துறைக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. ஒரு ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டது. கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்கள் ஏற்றுமதிகள், நிலக்கரி, உருக்கு, ஆகியவற்றின் சரக்கு போக்குவரத்தும் மோசமாக இருந்தது. இருந்தபோதிலும் சமாளித்துவிட்டோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.