ஜிஎஸ்டி சரியான திட்டம்.. அதை கெடுத்தது பாஜக..! ராகுல் காந்தி கடும் தாக்கு..!
பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து அது அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நவம்பர் 8-ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீது வீசப்பட்ட முதல் குண்டு.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது சிறந்த திட்டம். ஆனால் அத்திட்டத்தை அவசரகதியில் தவறாக அமல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது மத்திய பாஜக அரசு. இது இந்திய பொருளாதார வளர்ச்சியின் மீது வீசப்பட்ட இரண்டாவது குண்டு.
பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரத்தையே மத்திய பாஜக அரசு சீரழித்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.