உங்களைப் பற்றி பேசாதீர்கள்; குஜராத் வளர்ச்சியை பேசுங்கள் - பிரதமர் மோடியை ‘விளாசிய’ ராகுல் காந்தி
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் தன்னைப் பற்றியே 90 சதவீதம் பேசுகிறார். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேச வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விளாசியுள்ளார்.
2-ம் கட்ட தேர்தல்
குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14-ந்தேதி நடக்க உள்ளது. இதற்காக பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சாமி தரிசனம்
தாகோர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று பிராசரம்செய்தார். முன்னதாக அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் ராகுல் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-
நிலைப்பாடு மாற்றம்
பிரதமர் மோடி, இந்த தேர்தலில் அடிக்கடி தனது ,தேர்தல் அடிப்படை பிரசார திட்டத்தை மாற்றி வருகிறார். முதலில் பா.ஜனதா கட்சி நர்மதா விவகாரத்தை எழுப்பி பிரசாரம் ெசய்தது. அடுத்த 5 நாட்களில், நர்மதா நதிநீர் கிராமங்களுக்கு சென்று சேரவில்லை என மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் கேள்வி எழுப்பினர்.
வளர்ச்சி திட்டம்
உடனடியாக திடீர் ‘பல்டி’ அடித்த பா.ஜனதாவினர், நர்மதா நதி நீரை முன்வைத்து தேர்தலில் போட்டியிடவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்றனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களோ, தங்களுக்கு பா.ஜனதா அரசு எதுவுமே செய்யவில்லை என்று தெரிவித்தனர். அடுத்த 6 நாட்களில் , மறுபடியும் தனது நிலைப்பாட்டில் மாற்றிய பா.ஜனதா கட்சியினர் வளர்ச்சித் திட்டத்தை முன்னிறுத்தி பேசி, 22 ஆண்டுகால வளர்ச்சியை பேசுகின்றனர்.
90 சதவீதம்
பிரதமர் மோடியின் பேச்சில் 90 சதவீதம் அவரைப்பற்றியே இருக்கிறது. அவரின் பிரசாரப் பேச்சு என்பது, வாகனத்தை வலது புறம் திருப்பி, இடது புறம் திருப்பி, திடீரென பிரேக் பிடிப்பது போன்று நிலையில்லாமல் இருக்கிறது.
இந்த தேர்தல் மோடியை குறித்தோ அல்லது என்னைக் குறித்தோ அல்ல. பா.ஜனதா குறித்தும், காங்கிரஸ் குறித்தும் கிடையாது. தேர்தல் என்பது, குஜராத் மக்களின் எதிர்காலத்தைப் பற்றியதாகும்.
இனிமையான வார்த்தைகளால் தோற்கடிப்போம்
ராகுல் காந்தி பேசுகையில், “ பிரதமர் மோடிக்கு எதிராக யாரும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அன்பான மற்றும் இனிமையான வார்த்தைகள் மூலம் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் தோற்கடிக்க வேண்டும்’’ என்றார்.
ஏன் மவுனம்?
குஜராத் மாநிலத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை, ஊழல் குறித்து பேசாமல் மவுனமாக இருக்கிறார். குஜராத்தில் படேல், தலித்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும், அங்கன்வாடி பணியாளர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அது குறித்து அவர் பேசாமல் மவுனம் காக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை அனைத்து திருடர்களுக்கும் தங்கள் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற உதவியது. ஜி.எஸ்.டி. எனப்படும் கப்பார் சிங் டேக்ஸ் சிறு வணிகர்களை அழித்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வேலையிழக்க வைத்தது.
தேர்தல் பிரசாரத்தில் 60 முதல் 70 நிமிடங்கள் தன்னைப் பற்றி பேசும் பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு தடை குறித்தோ, கப்பார் சிங் டேக்ஸ் குறித்தோ, குஜராத் வளர்ச்சி குறித்தோ ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார்.
50 ரூபாய் நஷ்டம்
ராகுல் காந்தி பேசுகையில், “நான் ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது, அந்த கடைமுதலாளி கூறினார் என்றால், ஜி.எஸ்.டி. வரி வருவதற்கு முன் ரூ.100 சம்பாதித்த நிலையில், இப்போது ரூ.50தான் கிடைக்கிறது. மோடியால் 50 ரூபாய் நஷ்டம் என்றார்.
பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நிறுவனம் ஒரே ஆண்டில் ரூ.50 ஆயிரத்தை எப்படி ரூ. 80 கோடியாக மாற்றினார்?. எனக் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு அவர் பேசினார்.