Rahul Gandhi to appear before ED again in National Herald case Rahul Gandhi ED case: rahul gandhi: rahul ed: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

9 மணி நேரம்
ராகுல் காந்தி விசாரணை முடிந்து நேற்று இரவு 11 மணிக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். 2-வது நாளாக இன்றும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதால், இன்றும் அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராக உள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. அந்த சம்மனை ஏற்று ராகுல் காந்தி நேற்று 12 மணி அளவில் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தில்ஆஜராகினார்.
உணவு இடைவேளை
ராகுல் காந்தியுடன் அவரின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, பாதுகாவலர்கள் ஆகியோர் சென்றனர். பிற்பகலில் உணவு இடைவேளைக்காக ராகுல் காந்திக்கு 80 நிமிடங்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழங்கினர்.
உணவு இடைவேளை முடிந்தபின் மீண்டும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேஷனல் ஹெரால்டு வழக்கு, யங் இந்தியா லிமிடட் உள்ளிட்டவை குறித்துவிசாரணை நடத்தினர்.

ராகுல் காந்தி முதல்முறையாக அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகினார். மத்திய அரசு அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் டெல்லியில் அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
சிதம்பரத்துக்கு காயம்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ரன்தீப் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோர் சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பிரமோத் திவாரி ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தபோது போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தியபோது, சிதம்பரம் கீழே விழுந்தார். இதில் சிதம்பரத்துக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆனால், டெல்லி போலீஸார் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் யார் மீதும் எந்தவிதமான பலப்பிரயோகமும் செய்யவில்லை. அதுபோன்று வரும் புகார்கள் தவறானவை என்று விளக்கம் அளி்க்கப்பட்டது.
ராகுல் காந்தியிடம் விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 26எம்.பி.க்கள், 5 எம்எல்ஏக்கள் உள்பட 459 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண் நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இரவு 11மணிக்கு ராகுல் காந்தி விசாரணை முடிந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.

2-வது நாள்
அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு இடையே ராகுல் காந்தி உணவு இடைவேளேயின்போது கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியை சந்தித்தார். ஏறக்குறைய இரண்டரை மணிநேரத்துக்குப்பின்புதான் அமலாக்கப்பிரிவு விசாரணையில் ராகுல் காந்தி இணைந்தார்.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ ராகுல் காந்தியிடம் இன்னும் விசாரணை நடத்தப்பட இருப்பதால், செவ்வாய்கிழமையும் அவர் ஆஜராகக் கோரியுள்ளோம். இன்று விசாரணைக்குப்பின் ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தை எழுத்துபூர்வமாக அளிப்பார்” எனத் தெரிவித்தனர்
