Rahul Gandhi: ராகுல் காந்தி விமானம் தரையிறங்க மறுப்பு? வாரணாசி விமான நிலையம் பதில்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் விமானம் தரை இறங்க அனுமதி மறுக்கவில்லை, அவரே பயணத்தை ரத்து செய்தார் என வாரணாசி விமான நிலையம் கூறியுள்ளது.
ராகுல் காந்தி பயணம் செய்யும் விமானத்தை வாரணாசியில் தரையிறக்க அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், பயணத்தை ராகுல் காந்தியை ரத்து செய்திருக்கிறார் என்று விமான நிலையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பயணத்தை தாமே ரத்து செய்தார். இதுதொடர்பாக அவர் பயணம் செய்ய இருந்த விமான நிறுவனம் முந்தைய நாள் இரவு வாரணாசி விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி பயணம் ரத்தானதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
வயநாடு எம்பி ராகுல் காந்தி... சொந்த தொகுதிக்கு வருகை புரிந்த நாட்கள் எத்தனை தெரியுமா?
“விமான நிறுவனம் பிப்ரவரி 13, 2023 அன்று இரவு 9.16 மணிக்கு வாரணாசி விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி ராகுல் காந்தி விமானத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறியுள்ளது” என்று விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ராகுல் காந்தி தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்குச் சென்று அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் நேற்று இரவு தனி விமானம் மூலம் வாரணாசிக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், விமானம் லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் இரவு 10.45 மணிக்கு விமானம் தரை இறங்க இருந்த நிலையில், விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை ஒரு 'சாக்குப்போக்காக'க் கூறி, கடைசி நிமிடத்தில் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அஜய் ராய் கூறியிருந்தார். இந்நிலையில், வாரணாசி விமான நிலையம் இதுகுறித்து அளித்துள்ள பதிலில், ராகுல் காந்தியே பயணத்தை ரத்து செய்திருப்பதாகக் கூறியுள்ளது.