மக்களவைத் தேர்தலுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்

மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலில் அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மக்களவைத் தேர்தலுக்கான ஆளும் பாஜகவின் ‘மோடியின் உத்தரவாதங்கள்’க்கு பதிலடியாக ‘காங்கிரஸ் உத்தரவாதங்கள்’-ஐ ராகுல் காந்தி அறிவித்தார். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்.

25 வயதுக்குட்பட்ட டிகிரி, டிப்ளமோ படித்த அனைத்து இளைஞர்களுக்கும் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். இது சட்டமாக்க்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படும். சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5000 கோடியில் ஸ்டார்ட்- அப் நிதி உருவாக்கப்படும்.

கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படும். தேர்வு தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க, காகிதக் கசிவுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும். அரசு போட்டித் தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும், அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது.” ஆகிய இளைஞர்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கான உரிமை பயணம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து!

இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற எண்ணம் பிரதமர் மோடிக்கு இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசுத் துறைகளில் கடந்த பத்தாண்டுகளாக குவிந்துள்ள காலிப் பணியிடங்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் ராகுல் அறிவித்தார்.

பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதாக விமர்சித்த ராகுல் காந்தி, 15 முக்கிய துறைகளில் 30 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். நிரந்தர வேலைகளை பாஜக சுமையாகப் பார்க்கிறது என்றும், ஒப்பந்த முறையை ஊக்குவிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். காலியிடங்கள் இளைஞர்களின் உரிமை என்பதை வலியுறுத்திய ராகுல், அவற்றை நிரப்ப உறுதியான திட்டத்தை காங்கிரஸ் கட்சி வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்