குஜராத் மக்கள் புத்திசாலிகள்; மோடியைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும் - ராகுல் காந்தி கடும் விளாசல்
குஜராத் மக்கள் புத்திசாலிகள், தேர்தல் பிரசாரத்தில் ஊழல் குறித்தோ அல்லது விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தோ பிரதமர் மோடி பேசமாட்டார் என்பது தெரியும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.
வழிபாடு
குஜராத் மாநிலச் சட்டசபைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று முடிந்தது. கடைசி நாளான நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அகமதாபாத் நகரில் உள்ள ஜெகந் நாத் கோயிலுக்கு சென்று வழிபாடுசெய்தார்.
அதன்பின் நிருபர்களுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது-
புத்திசாலிகள்
குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஒரு தரப்பு மக்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வந்து இருக்கிறார்கள். குஜராத் மக்கள் மிகவும் புத்திசாலிகள். ஊழல் குறித்தும், விவசாயிகள் பிரச்சினை குறித்தும் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசமாட்டார் என்பது அவர்களுக்கு தெரியும்.
இது பற்றிய ஒரு கண்ணோட்டம் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கிறது.நான் உண்மையில் சிறிது வியப்படைந்தேன். பா.ஜனதா கட்சி அதிகமான பலத்துடன் போட்டியிடும் என எதிர்பார்த்தேன்.
குஜராத் நலனுக்காக வழிபாடு
நான் கோயிலுக்கு செல்வதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. நான் ஒவ்வொரு கோயிலுக்கு செல்லும் போதும், குஜராத் மக்களின், மாநிலத்தின் நலனுக்காகவே பிரார்த்திக்கிறேன். கோயிலுக்கு நான் செல்வதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?.
எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து இருக்கிறேன். கேதார்நாத்கோயிலுக்கு கூட சென்று தரிசனம் செய்தேன். அந்த கோயில் என்ன குஜராத் மாநிலத்திலா இருக்கிறது?.
திசை திருப்பும் முயற்சி
பிரதமர் மோடி கடல் விமானத்தில் பயணம் செய்ததில் ஒன்றும் தவறில்லை. மோடி கடல் விமானத்தில் பயணம் செய்ய விரும்பினால் நல்ல விஷயம்தான். ஆனால், இது மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் செயலாகும். கடந்த 22 ஆண்டுகளாக குஜராத் மக்களுக்கு என்ன செய்திருக்கிறது பா.ஜனதா என்ற உண்மையான கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இதுவும், அதுவும் தவறு
காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக் கூறியதை நான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டேன். அதேபோல, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பேசிய கருத்தும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.