கேந்திர வித்யாலயா பள்ளியில் அமைச்சர்கள், எம்.பிகளுக்கான கோட்டா நீக்கம்..மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைவர்களுக்கான ஒதுக்கீட்டுகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளை நீக்கி மத்திய அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை
மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயாவில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெரும்பாலான பெற்றோர்கள் விருப்பப்படுகின்றனர். இதற்கு காரணமாக சிறப்பான கல்வி முக்கியமான காரணமாக இருந்தாலும், குறைந்த கட்டணம் என்பதே மற்றொரு காரணமாக உள்ளது. தனியார் பள்ளிகளில் பல லட்சம் ரூபாய் ஒரு ஆண்டிற்கு வசூலித்து வரும் நிலையில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயாவில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆண்டிற்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. இதனால் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பள்ளிகளின் தலைவர்களை நாடுவார்கள். இதன் காரணமாக பல்வேறு முறைகேட்டிற்கு வழி வகுப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அமைச்சர்கள், எம்.பி ஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
யார் யாருக்கு ஒதுக்கீடு
இந்தநிலையில் தற்போது மத்திய அரசு மற்றொரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் யார் யாருக்கு கேந்திர வித்யாலயா பள்ளியில் முன்னுரிமையில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்பதற்கான தகவல் இடம் பெற்றுள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் ஒவ்வொரு கல்வி இயக்குநரகமும், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத் தவிர, பாதுகாப்புத் துறையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் ஒரு கல்வியாண்டில் தங்கள் பாதுகாப்புப் பணியாளர்களின் குழந்தைகளைச் சேர்க்க அதிகபட்ச பெயர்களை பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேந்திரவித்யாலயா பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகள், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள், பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா & சௌர்ய சக்ரா, சேனா பதக்கம் (இராணுவம்) பெற்றவர்களின் குழந்தைகள் சேர்த்துக்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட SGFI/CBSE/தேசிய/மாநில அளவிலான விளையாட்டுகளில் I, II & III நிலையைப் பெற்ற திறமையான விளையாட்டுக் குழந்தைகளையும் சேர்த்து கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர், எம்.பி கோட்டா நீக்கம்
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மத்திய அமைச்சர்கள், எம்பி மற்றும் பள்ளிகளின் தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை எனவே கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இவர்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரியவந்துள்ளது. இந்த சுற்றறிக்கை தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் வெளியிட்டுள்ள தகவலில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைவர்களுக்கான ஒதுக்கீட்டுகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளை நீக்கி தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
ரயில்வே துறையில் பணியிடங்கள் ரத்து? அலறி துடிக்கும் ராமதாஸ்...