பஞ்சாப் சிறைச்சாலையில் இருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாதி ஹமீந்தர் சிங் மிண்டுவை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டம் நபா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அதிக பட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ள இந்த சிறையில் காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மிந்தர் சிங் உள்பட தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டன.
நேற்று காலை சுமார் 10 மணியளவில் போலீஸ் சீருடையில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், சிறைச்சாலையில் இருந்த போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பயன்படுத்தி கொண்ட அந்த கும்பல், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஹர்மிந்தர் சிங் மற்றும் சில கைதிகளை சிறையில் இருந்து விடுவித்தது. பின்னர் அவர்களை அழைத்து கொண்டு, அவர்கள் கொண்டு வந்த வாகனங்களில் தப்பி சென்றனர்.
சிறையை உடைத்து பயங்கரவாதிகள் தப்பிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், மற்ற மாநில போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். இந்த கும்பலை பிடிக்க உடனடியாக சிறப்பு அதிரடிப்படையை மாநில அரசு அமைத்தது.
தப்பிய கைதிகளையும், தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் பிடிப்பதற்காக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கிய பஸ்நிலையங்களில் கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டெல்லி எல்லை அருகே இன்று ஹமீந்தர் சிங் மிண்டு, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் தப்பிய மேலும் 5 பேர் இதுவரை பிடிபடவில்லை. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
