Punjab assembly election 2022 : அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள். மேலும், ஏழாவது ஊதியக் குழுவின் அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்படும்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சித் தலைவர்ச சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி உள்ளார். இந்நிலையில், இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அள்ளிவிட்டு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல், உட்கட்சி பூசல் காரணமான முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதுக்கட்சி தொடங்கிய அமரீந்தர் சிங், பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். அதேபோல், சுக்பிர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த முறை விட்டதை பிடிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி களத்தில் இறங்கி அதிரடி காட்டி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் பேசுகையில்;- சட்டப்பேரவைத் தேர்தலில், சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடனே, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள். மேலும், ஏழாவது ஊதியக் குழுவின் அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்படும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.