‘தான் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா? ’ - டுவிட் மூலம் ‘கலாய்’க்கும் ப.சிதம்பரம்
குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தன்னை முன்நிறுத்தியே பிரசாரம் செய்து வருகிறார். 42 மாதங்களாகிவிட்ட நிலையில், அவர் உறுதியளித்த ‘நல்ல காலம்’ எப்போது வரும். தான் பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
குஜராத்தில் டிசம்பர் 4, 9ந் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் ராஜ்கோட்டில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “ குஜராத்துக்கே வந்து மண்ணின் மைந்தனான மீது அவதூறு பரப்ப காங்கிரஸ் கட்சிக்கு துணிச்சல் எப்படி வந்தது?. மண்ணின் மைந்தர்களை காங்கிரஸ் அவமதிக்கிறது’’ என்று பேசி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது-
குஜராத்தில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் பிரதமர் மோடி அவரைப்பற்றியும். கடந்த காலத்தையும் குறித்து பிரசாரம் செய்து வருகிறார். குஜராத் மக்களையும், குஜாராத்தையும் எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பிரசாரம் செய்கிறார். தான் இந்த நாட்டின் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா?
குஜராத் தேர்தல் என்பதை மோடிக்கானது அல்ல, தனிமனிதர் சார்ந்தது அல்ல. நல்ல காலம் வரும் என்று பிரதமர் மோடி உறுதியளித்த நிலையில் 42 மாதங்கள் ஓடிவிட்டன.
நாட்டில் உள்ள வேலையின்மை, தனியார் முதலீட்டுக் குறைவு, சிறு, குறுந்தொழில்கள் நசிந்துவிட்டது, ஏற்றுமதி குறைவு, விலை உயர்வு ஆகியவை குறித்து மோடி பிரசாரத்தில் பேசுவதே இல்லை. ஏனென்றால், இதற்கெல்லாம் அவரிடம் எந்த பதிலும் இல்லை, அதுதான் உண்மை.
குஜராத் மண்ணின் மைந்தராக சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் குறித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஆனால், இந்த மண்ணின் மைந்தரான மகாத்மா காந்தியை பிரதமர் மோடி மறந்துவிட்டார். காந்திஜி இந்தியர் தானே?, குஜராத் மைந்தர்தானே?, தேசப்பிதா தானே? சுதந்திரப் போராட்டத்தை காங்கிரஸ் எனும் கருவியால் காந்திஜி முன்னெடுத்தார்.
சர்தார் வல்லபாய் படேலை தற்போது பிரதமர் மோடியும், பா.ஜனதா கட்சியும் தீவிரமாக ஆதரிக்கிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால், சந்தேகமே இல்லாமல், வல்லபாய் படேல், உயிரோடு இருக்கும் போது, பா.ஜனதாவும், ஆர்.எஸ்,எஸ். அமைப்பையும், அவர்களின் பிரித்தாளும் சித்தாந்தத்தையும் வெறுத்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.