Presidential Election: நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேனா.? நிதிஷ்குமார் சொன்ன நச் பதில்.!
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிருகிறேனா என்பது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆளும் பாஜக, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளது. இதேபோல 22 எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அந்தப் பதவிக்கு நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் கடந்த சில மாதங்களாகவே எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுபற்றி தன்னுடைய நிலைப்பாட்டை நிதிஷ்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.
பாட்னாவில் நிதிஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜூலை 18 அன்று நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி முடிவு செய்ய இது சரியான நேரம் அல்ல. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது எதிர்க்கட்சிளோ இதுவரை எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. இப்படி ஒரு சூழலில் முன்கூட்டியே அதுப் பற்றி முடிவு எடுக்க முடியாது. 2012-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். 2017-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்ததால் அதன் வேட்பாளரை ஆதரித்தோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் விருப்பப்படியே இதுவரை ஆதரவு அளித்து வந்திருக்கிறோம். இந்த முறை நாங்கள் இன்னும் முடிவு எதுவும் எடுக்க வில்லை. இதுவரை யார் குடியரசுத் தலைவர் வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்பதே தெரியவில்லை. வேட்பாளரை தேர்ந்தெடுக்க கட்சிகள், கூட்டணி சார்பில் ஆலோசிக்கப்படும். பிறகுதான் இதில் தெளிவான நிலை தெரியும். தற்போது வரை நாங்கள் எந்த ஆலோசனையும் நடத்தடவில்லை. ஊடகங்களில்தான் நான் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வருகின்றன. இதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கு போட்டியிடும் எண்ணமோ விருப்பமோ கொஞ்சமும் இல்லை” என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.