20 நாட்களுக்கு முன் ஜனாதிபதி மாளிகைக்குள் அனுமதி இல்லை; இன்று ஜனாதிபதி வேட்பாளர்!
இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் உள்ள ஜனாதிபதியின் மாளிகையினுள் ராம் நாத் கோவிந்துக்கு கடந்த மாதம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிம்லாவுக்கு சுற்றுலா
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக பிகார் ஆளுநரான ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த், கடந்த மே மாதம் 28-ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர்பிரதேசமான சிம்லாவுக்கு குடும்பத்தாருடன் சென்றார். அங்குள்ள பல்வேறு இடங்களையும் அவர் குடும்பத்ததுடன் சுற்றி பார்த்து, அங்குள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
மாம்பழங்கள் பரிசு
இமாச்சலப்பிரதேச ஆளுநர் ஆச்சார்யா தேவ்விராத்தும், ராம்நாத் கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், ஆளுநர் மாளிகையில் தங்கினார். இருவரும் ஒரே நாளில் இமாச்சலப்பிரதேசம், பீகார் மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டனர். மே 29-ந்தேதி இமாச்சப் பிரதேச ஆளுநருக்கு திருமண நாள் என்பதால், பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்ட மாம்பழங்களைராம்நாத் பரிசாக அளித்தார்.
ராம்நாத்துக்கு திருமணநாள்
அதற்கு மறுநாள் அதாவது 30-ந் தேதி ராம்நாத்துக்கு திருமண நாள். இதனால், திருமண நாளன்றுஇமாச்சலப் பிரதேசத்தில் எங்கு சுற்றிப் பார்க்கலாம் என ஆளுநர் ஆச்சார்யாவிடம் ராம்நாத்கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை
அப்போது, ஷிம்லாவில் இருந்து 15 கிலோமீட்டரில் மஷோப்ரா மலைப்பகுதியில் உள்ள ‘ தி ரீடிரீட்’ எனப்படும் ஜனாதிபதியின் மாளிகை உள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகை. அடர்ந்த காட்டுக்குள், மூங்களால் ஆன வீடு அமைக்கப்பட்டு இருக்கும். அதை சுற்றிப்பார்க்கலாம் என அவர் தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்பு
அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இந்த மாளிகைக்கு குறைந்த பட்சம் ஒரு முறையாவது ஜனாதிபதி வருகை தருவார். அப்பொழுது எல்லாம் இந்த மாளிகையானது, அவரது முதன்மை அலுவலகமாகச் செயல்படும். எனவே இந்த பகுதியானது பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டதாக இருக்கும்.
அனுமதி மறுப்பு
இந்த இடத்திற்கு வந்த ராம்நாத் ஜனாதிபதி மாளிகைக்குள் சுற்றிப்பார்க்க விரும்பி, தனது குடும்பத்தாருடன் அங்கு சென்றார். ஆனால் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள், அதற்கு உரிய முன் அனுமதியினை அவர் பெறவில்லை என்று கூறி அவரை உள்ளே விட மறுத்து விட்டனர். அவர் தான் ஒரு மாநில ஆளுநர் என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியும், ராம்நாத் கோவிந்தை உள்ளே விடவில்லை. இதனால் அவர் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லாமல் திரும்பி விட்டார்.
அடியெடுத்து வைப்பாரா?
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ராம் நாத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஒருவேளை, அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், தன்னை அனுமதிக்க மறுத்த அதே மாளிகைக்குள் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அடியெடுத்து வைப்பார்.