பள்ளி விழா நிகழ்ச்சி நிறைவு - டெல்லி புறப்பட்டார் பிரணாப்!
உதகை பள்ளி நிகழ்ச்சியை முடித்து கொண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் லாரன்ஸ் பள்ளி உள்ளது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளியின் 159-வது ஆண்டு விழா இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.20 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார்.
அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முக்கிய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.
பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு சென்றார். அங்கு அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து பள்ளி விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்புரையாற்றினார்.
விழா முடிந்ததையடுத்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பிய பிரணாப் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.