"இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது...!" குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க புதிய செயலி...!
குற்றச்சம்பவங்களைத் தடுக்க காவல் துறையினர், பல்வேறு யுக்திகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய செயலி ஒன்றை புதுச்சேரி போலீஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய செயலியை, புதுச்சேரி டிஜிபி சுனில்குமார் அறிமுகப்படுத்தினார். காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய செயலியை அறிமுகப்படுத்தியபின், டிஜிபி சுனில்குமார் பேசும்போது, இந்த புதிய செயலியில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 7,500-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் விபரங்கள் மற்றும் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த செயலி மூலம், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரிடம் சிக்கும் நபர்கள் அல்லது பழைய குற்றவாளிகளின் முகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு எளிதில் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். எனவே, குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க முடியும் என்றும், டிஜிபி சுனில்குமார் தெரிவித்தார்.