பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 'ஆதி மஹோத்சவ்' தேசிய பழங்குடியினர் திருவிழாவைத் தொடங்கிவைக்கிறார்.
நாட்டின் பழங்குடியின மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுப்பதிலும், நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை அளிப்பதிலும் பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்துவருகிறார். அந்த வகையில், தேசிய அளவில் பழங்குடியினரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் முயற்சியாக, 'ஆதி மஹோத்சவ்' என்ற மாபெரும் பழங்குடியினர் திருவிழா நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடக்கும் இந்த விழாவை பிப்ரவரி 16ஆம் தேதி காலை 10:30 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பழங்குடியினரின் கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், பாரம்பரிய கலை ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் 'ஆதி மஹோத்சவ்' திருவிழா இருக்கும். இதனை பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) இந்த விழாவை நடத்திவருகிறது.
இந்த ஆண்டு, பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் 200 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைய உள்ளன. சுமார் 1000 பழங்குடி கைவினை கலைஞர்கள் பங்கேற்பார்கள்.

பழங்குடியினர் தயாரித்த கைவினைப் பொருட்கள், கைத்தறி, மட்பாண்டங்கள், நகைகள் போன்றவை விற்பனை செய்யப்படும். 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்படுவதால், பழங்குடியினரால் வளர்க்கப்பட்ட சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பழங்குடியினர் விழாக்களில் அவர்கள் ஆடும் நடனங்கள், பாடும் பாடல்களை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் இடம்பெறும். இந்த விழாவைத் தொடங்கிவைக்கும் பிரதமர் பழங்குடி கலைஞர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். ஸ்டால்களில் விற்பனைக்கு உள்ள் பொருட்களையும் பார்வையிடுகிறார்.
