2022 பட்ஜெட்டால் விவசாயிகள், ஏழை மக்கள் அதிகம் பயன்பெறுவர் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

2022 பட்ஜெட்டால் விவசாயிகள், ஏழை மக்கள் அதிகம் பயன்பெறுவர் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவரது உரையில், பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டதில் இருந்து பல தரப்பிலிருந்தும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கும். விவசாயிகள், ஏழை மக்கள் இந்த பட்ஜெட்டில் அதிகம் பயன் பெறுவர். கங்கை நதிக் கரையோரம் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு மிகச் சிறப்பானது.

மிகச் சிறப்பான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மக்கள் நட்பு மற்றும் முற்போக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. இது பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது. இந்த பட்ஜெட், அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. மத்திய பட்ஜெட் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் மற்றும் பல புதிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நாட்டிலேயே முதன் முறையாக, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு போன்ற பகுதிகளுக்கு பர்வத் மாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் மூலம் மலைப் பகுதிகளில் நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறை எளிதாக்கும். இது, எல்லையோர கிராமங்களுக்கு வலுசேர்க்கும். கங்கை நதியை சுத்தப்படுத்துவது தவிர, விவசாயிகளின் நலனுக்காக ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இது கங்கை நதியை ரசாயனமற்ற நதியாக மாற்ற உதவும். நாளை காலை 11 மணிக்கு, பட்ஜெட் மற்றும் சுயசார்பு இந்தியா என்ற தலைப்பில் பேசுவேன். அப்போது பட்ஜெட் குறித்து விரிவாக பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.