உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை சுட்டுத் தருவீர்களா? தமிழக பெண்ணிடம் நெகிழ்ந்த மோடி
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்துக்காக மத்திய அரசு எட்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த ருத்ரம்மாவிடம் வணக்கம் என்று கூறி பிரதமர் பேசத் தொடங்கினார்.
எரிவாயு மானியம் திட்டத்தினால் பயன் அடைந்துர்களா என்று பிரதமர் கேட்டார். இத்தனை ஆண்டுகளாக விறகு அடுப்பில் சமைத்து வந்தோம். விறகு அடுப்பில் சமைக்க கஷ்டமாக இருந்தது என்றார் ருத்ரம்மா. இட்லி, தோசை போன்ற உணவுகளைச் சமைக்க சிரமமாக இருந்ததா? என்றார் மோடி.
இதற்கு ருத்ரம்மா, ஆமாம்... விறகு அடுப்பில் சமைக்க கஷ்டப்பட்டோம். இலவச கேஸ் இணைப்பு வழங்கியதால், உணவுகளைச் சமைக்க சுலபமாக இருக்கிறது என்று கூறினார்.
அப்போது தமிழகம் வந்தால் எனக்கு தாசை சுட்டுத் தருவீர்களா? என்று பிரதமர் கேட்டதற்கு, நிச்சயமாக தருவேன் என்று ருத்ரம்மா கூறினார். இந்த பேச்சு 3 நிமிடங்கள் நடந்தது.
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் தமிழகமே கொந்தளித்துப்போயுள்ள நிலையில், தமிழக பெண்ணிடம் தோசை சுட்டுத் தருவீர்களா? பிரதமர் கேட்டது குறித்து நெட்டிசன்கள் கிண்டலாக விமர்சனம் செய்து வருகின்றனர்.