4 வருஷத்துல இல்லாத விலை உயர்வு…. உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை!!
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 18 காசுகள் உயர்ந்துள்ளதால் பொ மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நி்ர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப் பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின.
அதன்பின் ஒவ்வொரு நாளும் சில காசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாக பார்க்கும் போது, விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையான உய்ர்வை சந்தித்போது கூட பெட்ரோல், டீச்ல் விலை இவ்வளவு உயரவில்லை என ஆதங்கப்படுகின்றனர்.
இந்நிலையில் திடீரென டீசல், பெட்ரோல் விலையில் 18 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.73க்கு விற்பனையாகிறது. கடந்த 2014ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி ரூ.76.06 காசுகளாக இருந்தது. அதற்கு பின் இப்போதுதான் இந்த விலை உயர்வு வந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை டீசல் ஒரு லிட்டர் ரூ.68.12 காசுகளுக்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.48 காசுகளுக்கும் இன்று விற்பனையாகிறது.
இது உள்மாவட்டங்களில் இந்த விலையோடு போக்குவரத்துச் செலவையும் சேர்க்கும் போது மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த 28-ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் 87 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.