இறைச்சிக்கு இனி தடை…பீட்டா அமைப்பு கிளப்பும் புது பூகம்பம்….
அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைத்து வகையான இறைச்சி உணவுகளையும் தடை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கடிதம் எழுதியுள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் விலங்குகள் நல அமைப்பான பீட்டா இந்தியாவிலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றது.
ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்த பீட்டா அமைப்பு சார்பில் உச்சநீதி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது, பீட்டா அமைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று பேராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், பீட்டா அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் இருந்து அனைத்து வகையான இறைச்சி உணவுகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஜெர்மன் நாட்டு அமைச்சகம் தமது அரசு தரப்பு விருந்துகளில் இருந்து இறைச்சி உணவுகளை தடை செய்துள்ளதை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள பீட்டா அமைப்பு, இதன் மூலம் உலகத்திற்கே இந்தியா வழிகாடியாக இருக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே பசுவதை தடுப்புச் சட்டம், மாட்டிறைச்சிக்கு எதிர்ப்பு என பாஜக தலைமையிலான அரசு, பீட்டாவின் இந்த கோரிக்கையை ஏற்கும் என்றே தெரிகிறது.