peta again appeal on supreme court against jallikattu

உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருந்ததது. பீட்டா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்களும், இளைஞர்களும் இப்பிரச்சனையை கையிலெடுத்து போராட்டத்தில் இறங்கினர். மிகச்சாதாரணமாக தொடங்கிய இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தீயாக பரவியது.

லட்சக்கணக்கான இளைஞர்களின் இந்த போராட்டம் உலகையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. மிகப் பிரமாண்டமான இந்த போராட்டத்தால் மிரண்டு போன மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகளில் இறங்கின.

அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் உடனடியாக டெல்லி சென்று அவரசக் சட்டத்துக்கு ஒப்புதல் வாங்கி வந்தார். அச்சட்டம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த வெற்றி கொண்டாடப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது அதிகமாக அடி வாங்கியது ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பான பீட்டா தான். பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போது எழுந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது எத்தனை பேர் இறந்தார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய பட்டியலை பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஒரு போலீஸ்காரர் உட்பட 12 பேர் உயிரிழந்ததாகவும், 992 பேர் காயம் அடைந்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏராளமான மாடுகள் உயிரிழந்ததாகவும் பீட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.