"நாங்களும் “ஃபாஸ்ட்புட்ல இறங்குவோம்ல!!" - McDonald, KFCக்கு போட்டியாக களமிறங்கும் பாபா ராம்தேவ்..!!
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களான மெக்டோனல்ட், கே.எப்.சி., சப்வே ஆகியவற்றுக்கு போட்டியாக் பாஸ்ட் புட் கடைகளிலும் இறங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று வெளியிட்டார்.
மெக்டோனல்ட், கே.எப்.சி., சப்வே ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் அளிக்கும் பீட்சா, பர்கர், சிக்கன் உணவுகளைக் காட்டிலும், 400 வகையான சைவ உணவுகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்போவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாபா ராம்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், “ வெளிநாட்டில் இருந்த வந்ச பன்னாட்டு நிறுவனங்கள் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் நாட்டை கொள்ளை அடிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் இல்லாத பூமியாக்க வேண்டும். மெக்டோனல்ட், கே.எப்.சி., சப்வே ஆகிய துரித உணவகங்களுக்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனமும் விரைவில் பாஸ்ட்புட் உணவகங்களை தொடங்கும்.
இங்கு தென் இந்திய, வட இந்திய உணவுகள் என்று பிரிக்கப்படாமல் அனைத்து வகையான உணவுகளும் விற்பனை செய்யப்படும். மிகவும் சத்தான, ஆரோக்கியமான, ருசியான 400 வகையான உணவுகளாக இருக்கும். மக்களின் விருப்பம் எதுவோ அந்த உணவுகளே தயாரிக்கப்படும்.
பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் சிக்கன்,மட்டன் உணவுகளுக்கு மாற்றாக பதஞ்சலியின் ஆரோக்கிய உணவகம் இருக்கும்.
இப்போது பதஞ்சலி பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் நாடுமுழுவதும் 12 ஆயிரம் இருக்கின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் இது இரு மடங்காக உயர்த்தப்படும். நடப்பு ஆண்டில் விற்பனை இலக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டில் பல பொருட்களின் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக பதஞ்சலி இருக்கும் என நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.