காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் 250 பேர் பதுங்கியிருப்பதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் எனவும், உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் முழுஉஷார்நிலையில் இருக்க பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உரி தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற அதிரடி தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனை, இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகின்றனர். நேற்று ஜம்மு-காஷ்மீரின் Pampore பகுதியில் உள்ள தொழில்முனைவு மேம்பாட்டு கல்வி நிறுவன கட்டடத்திற்குள் பதுங்கிய தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 250 பேர் பதுங்கியிருப்பதாகவும், பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் முழுஉஷார்நிலையில் இருக்க பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, எல்லைப்பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
