பஞ்சாபில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை வீசும் பாகிஸ்தான்!
சீன ஆளில்லா விமானங்கள் மூலம் பஞ்சாபில் போதைப் பொருட்கள், ஆயுதங்களை பாகிஸ்தான் வீசுவது தெரியவந்துள்ளது
அதிக நேரம், அதிக உயரத்தில் பறக்கக்கூடிய உயர் தொழில்நுட்பத்திலான சீன ட்ரோன்கள் மூலம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வீசுவது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர், கசூர் மற்றும் ஷேக்புரா அருகே இருந்து புறப்படும், நவீன செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டுள்ள இந்த ட்ரோன்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீடுவிட்டு மீண்டும் பாகிஸ்தான் சென்றடைகிறது. இவை, பாகிஸ்தானில் உள்ள கடத்தல்காரர்களால் இயக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பஞ்சாப் பகுதியில் இந்த ட்ரோன்கள் மூலம் வீசப்படும் 200 பகுதிகளை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அடையாளம் கண்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும், இதுபோன்று 26 ஆளில்லா வான்வழி வாகனங்களை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் 165 ஆளில்லா வான்வழி வாகனங்கள் தென்பட்டதாக பாதுகாப்பு நிறுவன்ங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய ட்ரோன்கள் பொதுவாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, அதாவது இரவு நேரத்தில் இயக்கப்படுவதாக இதுகுறித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ட்ரோன்களில் இருந்து பொருட்களை வீச அவை 700 மீட்டருக்கு குறைவான உயரத்தில் இயக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பாதுகாப்பு படைகளின் கண்களில் இருந்து தப்புவதற்காக, அவை 1,500-2,000 மீட்டர் உயரத்தில் பறக்கவிடப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆளில்லா விமானங்கள் ஜிபிஎஸ் மூலம் இயக்கப்படுகின்றன. எல்லைக்கு அப்பால் இருந்து அவற்றை இயக்கும் நபர்களால் அவை ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன் மூலம், போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை துல்லியமான இடத்தில் அவர்கள் வீசுகிறார்கள். அந்த பொருட்களை எடுப்பவர்கள் அதனை சரியாக அடையாளம் காணும் பொருட்டு அதன் மீது ஒளிரும் சாதனமும் ஒட்டப்பட்டுள்ளது.” என்றார்.
இத்தகைய ட்ரோன்கள் சுமார் 5 முதல் 7 கிலோ வரையிலான பொருட்களை சுமந்து செல்லும். இதில் போதைப்பொருள் மற்றும் ஏகே-47 உள்ளிட்ட சிறிய ஆயுதங்கள் உள்ளன. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களில் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை. சீன நிறுவனமான DJI இந்த ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்கிறது என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
குஜராத் கனமழை: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!
“6 கிலோ எடை கொண்ட இந்த குவாட்காப்டர், 2.7 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லும் திறன் கொண்டது. 55 நிமிடங்கள் பறக்கும் நேரத்தைக் கொண்டிருப்பதால், இத்தகைய ட்ரோன்கள் நம்பகமானது. இது குறிப்பிட்ட இடங்களில் துல்லியமாக பொருட்கள் வீசப்படுவதை உறுதி செய்கிறது. இதில் உயர் ரக கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவை நேரலையில் பதிவு செய்து படம் எடுக்கும் திறன் கொண்டவை. தவிர, ஒரே நேரத்தில் மூன்று பொருட்களை இவற்றால் எடுத்துச் செல்ல முடியும்.” என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சாதனத்தை சுட்டு வீழ்த்தினாலோ அல்லது கைப்பற்றப்பட்டாலோ அதன் அனைத்து தரவையும் தொலைவிலிருந்து, அதாவது அண்டை நாட்டில் அமர்ந்திருக்கும் இந்த ட்ரோன்களின் ஆபரேட்டர்களால் நீக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அவர்களின் முந்தைய விமானப் பாதையைக் கண்காணிப்பது கடினமாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ரஜதல் எல்லைப் புறக்காவல் நிலையம் அருகே இதுபோன்ற ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த ட்ரோனின் தடயவியல் ஆய்வில், அது கடந்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி சீனாவின் ஷாங்காய்-இல் உள்ள ஃபெங்சியான் மாவட்டத்தில் பறந்ததாகவும் பின்னர் 28 முறை பாகிஸ்தான் பஞ்சாபின் கானேவால் மாவட்டத்தில் செப்டம்பர் 24 முதல் டிசம்பர் 25 வரை பறந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சுடப்பட்ட அல்லது மீட்கப்பட்ட பல ட்ரோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என அப்போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.
டெல்லியில் ட்ரோன்களுக்கான தடயவியல் ஆய்வகத்தை பிஎஸ்எஃப் அமைத்துள்ளது, அங்கு கைப்பற்றப்பட்ட ட்ரோன்களின் சிப்களில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில், லாகூரில் இருந்து 6 கிலோ போதைப்பொருள் ஏற்றி வந்த ஆளில்லா விமானம் லாகூர் அருகே உள்ள ரசூல்புரா கிராமம் அருகே விழுந்து நொறுங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.