ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 3 பேர் காயமடைந்தனர். எல்லையில் 2 ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகதி செக்டார் பகுதியில் 2 முறை தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நடந்தது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதனால் பாகிஸ்தானின் நிலைகளும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஊடுருவலை முறியடிக்க முயன்றபோது ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவர் பஞ்சாப் மாநிலம் டரன்டரன் பகுதியை சேர்ந்த வீரர் குர்சேவாக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் மேலும் 4 இந்திய நிலைகளை குறிவைத்தும், குடியிருப்பு பகுதிகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தியது. மார்டர் ரக குண்டுகள், சிறிய ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியது. இதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்த 2பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காஷ்மீர் நிலவரம் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் மெகபூபா தலைமையில் நேற்று நடந்தது. இதில் டிஜிபி ராஜேந்திரா உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்து டிஜிபி கூறுகையில், காஷ்மீரில் வன்முறை பரவுவது தற்போது குறைந்துள்ளதாலும், நிலவரம் இன்னும் மோசமான நிலையில்தான் உள்ளது.

தற்போது 250 முதல் 300 தீவிரவாதிகள் காஷ்மீரில் உள்ளனர். எல்லையில் தீவிரவாத ஊடுருவல் தொடர்ந்து நடப்பது கவலை அளிக்கிறது. அதனால் இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்கு நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். வன்முறையாளர்களால் எரிக்கப்பட்ட 70 கட்டிடங்களில் 53 கட்டிடங்கள் முற்றிலும் நாசமாகிவிட்டன.

காஷ்மீரில் இயல்பு நிலை ஏற்பட்டதுபோல் தோன்றினாலும், நிலவரம் திருப்தி அளிக்கவில்லை. சமூக விரோதிகளுக்கு எதிராக போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.