உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய எம்.எம்.டி.சி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  


அதேசமயம் அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் அந்த வெங்காயம் இந்தியாவுக்கு வருகிறதாம்.எதிர்பாராத கனமழை காரணமாக வெங்காய பயிர்கள் சேதம் அடைந்தது. அதனால் உள்நாட்டில் சப்ளை கடுமையாக பாதித்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் எதிரொலியாக வெங்காயத்தின் விலை விறுவிறுவென உயர்ந்து வருகிறது. தற்போது சில்லரை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120-150 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலை சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100ஐ எட்டி விட்டது.

மத்திய அரசு வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சப்ளை அதிகரிக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை, வர்த்தகர்கள் கையிருப்பு வைக்க உச்ச வரம்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இதுதவிர, 1.20 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு சார்பாக எம்.எம்.டி.சி. நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

 எம்.எம்.டி.சி. நிறுவனம் அண்மையில் துருக்கியிலிருந்து 6,092 டன் வெங்காயம் இறக்குமதி ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. அடுத்த வாரம் அந்த வெங்காயம் இந்தியாவுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதிக்கு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த வெங்காயம் வரும் ஜனவரியில் இந்தியாவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.