“ வெங்காயம் பதுக்கினால் கடும் நடவடிக்கை ’’….மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
நாட்டில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும், பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய உணவுத்துறை அமைச்சகம் கடந்த 25-ந்தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு வெங்காயத்தின் விளைச்சல் சிறப்பாக இருந்தபோதிலும், பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது.
அடுத்து வரும் பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் விலையை உயராமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இருக்கிறது. இதற்காக விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசுகள் கையாள வேண்டும். அத்தியாவசிப் பொருளான வெங்காயத்தை வர்த்தகர்கள், முகவர்கள் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கலில் ஈடுபடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். போதுமான அளவில் இருப்பு வைத்து இருப்பதையும் அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
அதிக விலைக்கு விற்று கொள்ளைலாபம் சம்பாதிக்க நினைக்கும் வர்த்தகர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தியாவசிப் பொருளான வெங்காயம் பண்டிகை காலத்தில் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் டெல்லியில் கிலோ ரூ.15லிருந்து, ரூ. 38க்கும் விற்பனையாகிறது. சென்னையில் கிலோ வெங்காயம் ரூ.31க்கும், கொல்கத்தாவில் ரூ.40க்கும், மும்பையில் ரூ.33க்கும் விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரும் மாதங்களில் தசரா பண்டிகை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகாலமும், திருமண காலங்களுக்கும் வருகின்றன. அப்போது வெங்காயத்தின் தேவை கடுமையாக அதிகரிக்கும். அந்த நேரத்தில் விலை உயரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளது.