என்.டி.டி.வி. இந்தி சேனல் ஒளிபரப்பை ஒருநாள்தடை செய்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனக் குழுமத்தின் சார்பில் மனு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் கடந்த தாக்குதல் நடத்தினர். அப்போது, தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில், போர் தந்திரங்கள் தொடர்பான தகவல்களைஎன்.டி.டி.வி. இந்தியா என்ற இந்தி சேனல் ஒளிபரப்புச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் குழு
இந்த விஷயம் குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் தலைமையிலான குழு விவாதித்தது. செய்திசேனல் வெளியிட்ட தகவல், பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி அந்த செய்தி சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த செய்தி நிறுவனம், வெப்சைட் மற்றும் ஊடகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தகவல்களைதான் ஒளிபரப்புச் செய்தோம் என பதில் அளித்தது. இதை ஏற்றுக்கொள்ளாத மத்திய அமைச்சரவைக்குழு, வரும் 9-ந்தேதி ஒருநாள் மட்டும் என்.டி.டி.வி. இந்தி சேனல் ஒளிபரப்பு செய்ய தடை விதித்தது.
மத்திய அரசின் இந்த தடை உத்தரவுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் அமைப்புகள் இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் என்.டி.டி.வி. சேனலுக்கு விதிக்கப்பட்ட தடை சரியானதுதான் என வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டது.
இந்தசூழலில், என்.டி.டி.வி. குழுமத்தின் சார்பில் மத்தியஅரசின் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மனு செய்யப்பட்டுள்ளது. இதை அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான, சுபர்னா சிங் டுவிட்டரில்உறுதி செய்தார்.
