one crore plants in kerala functions for environment changes
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கேரளாவில் அரசு சார்பாக ஒரு கோடி மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன.
உலக சுற்றுச் சூழல் தினம் நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடத்தப்பட்டன. இந்நிலையில் சுற்றுச் சூழல் தினத்தையொட்டி ஒரு கோடி மரக்கன்றுகள் கேரள அரசு சார்பாக நேற்று நடப்பட்டன.
இதுகுறித்து அம்மாநில முதல் அமைச்சர் பினராயி விஜயன் விடுத்துள்ள செய்தியில், சுற்றுச் சூழல் தினத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
முதல் கட்டமாக, ராஜ்பவனில் கவர்னர் பி. சதாசிவம் மரக்கன்றினை நட்டு விழாவை தொடக்கி வைத்தார். பிரபல நடிகர் மோகன்லால் கல்லூரி ஒன்றில் மரக்கன்றை நட்டு, அரசு விழாவில் பங்கேற்றார். இதேபோன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கேரள அரசின் ‘பசுமை கேரளா திட்டத்தின்’ கீழ் இந்த விழாக்கள் நடத்தப்பட்டன.
முந்தைய ஆண்டுகளில் அகாசியா, யூகலிப்டஸ் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன. இவற்றின் வேர்கள் அதிக ஆழம் சென்று நீரை உறிஞ்சுவதாலும், இம்மரங்களால் பெரிய அளவில் பலன்கள் ஏற்படவில்லை என்பதாலும், அந்த மரக்கன்றுகள் இந்த ஆண்டு நடப்படவில்லை. இதற்கு பதிலாக குறைந்த அளவு நீரை உறிஞ்சி கனிகளை தரக்கூடிய மரங்களின் கன்றுகள் நடப்பட்டதாக கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக போராடி வருபவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். சுற்றுச் சூழலை பாதுகாத்து சிறப்பான பூமியை உருவாக்குவோம் என மீண்டும் இந்த நேரத்தில் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
பூமி வெப்ப மயமாதலை கட்டுப்படுத்துவதற்காக பாரீஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து அமெரிக்கா கடந்த வாரம் விலகியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, வரும் தலைமுறையினர் சுத்தமான, ஆரோக்கியமான சுற்றுச் சூழலை பெற வேண்டும். அதனை தற்போது உலகில் வாழும் சந்ததியினர் நாசப்படுத்தி விடக் கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
