oldlady eaten by dogs in madhyapradesh
மத்தியப்பிரதேசம் போபால் அருகே மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த வயதான பெண்ணை நாய்கள் இழுத்துச் சென்று தின்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும். மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடந்துவருகிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் மருத்துவமனையின் தரம், சிகிச்சை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என்பதை இதுகாட்டுகிறது.
போபால் நகர் அருகே ராஜ்கார்க் நகரில் மாவட்ட தலைமை மருத்துவமனை இருக்கிறது. இங்கு 70 வயதான பிஸ்மில்லா பாய் என்ற ஆதரவில்லாத பெண் கடந்த 20ந்தேதி சிகிச்சைக்காக சேர்ந்தார். 22-ந்தேதி அந்த பெண் திடீரென மாயமானார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
போலீசாரும் பிஸ்மில்லாவை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு சற்று தூரத்தில் இருக்கும் ஒரு குப்பை கிடங்கை பணியாளர்கள் சுத்தம் செய்தபோது, அங்கு மனித தலையும், சில உடல் பாகங்களும் நேற்று கிடந்துள்ளன. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அங்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதில், அது காணாமல் போன பிஸ்மில்லா பாய் தலை என்பது அறிந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 22-ந்ததேதி இரவு பிஸ்மில்லா பாய், மருத்துவமனையில் இருந்து வெளியேறி இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளார்.
அதன்பின் அவர் திரும்பி வரவில்லை. அந்த குப்பை கிடங்கு பகுதிக்கு சென்ற பிஸ்மில்லா பாயை நாய்கள் தாக்கி, அவரை ஏறக்குறைய 5 முதல் 10 அடிவரை இழுத்துச்சென்று தின்று இருப்பது தெரியவந்தது, ஏறக்குறைய உடல்பகுதி முழுவதையும் நாய்கள் தின்றுவிட்டன. அதற்கான தடயங்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
