"செல்லாத 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம்..!!" - மாணவரின் அபார கண்டுபிடிப்பு!!!
மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையால் மதிப்பு இழந்த ரூ.500 நோட்டு மூலம்ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் மின்சாரம் தயாரித்து வருகிறார்.
இவரின் சாதனையை பாராட்டிய பிரதமர் அலுவலகம் இது குறித்து அறிக்கை அளிக்க மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், நுவபாடா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் லச்மான் தண்டி(வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள காரியார் கல்லூரியில் இயற்பியல் முதல் ஆண்டு படித்து வருகிறார். இவரின் தந்தை விவசாயி. தந்தைக்கு உதவிய நேரம் போக, சுயமாக பல்புகளை தயாரித்து, லச்மான் தண்டி விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், நாட்டில் ஊழல், கருப்புபணத்தை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இந்த நோட்டுகளும் கடந்த மார்ச் இறுதியோடு மாற்றத்தக்க முடியாத நோட்டாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த ரூ. 500 நோட்டு குறித்து தீவிரமாக சிந்தித்த லச்மான் தண்டி, அதில் உள்ள சிலிகான் கம்பிகள் மூலமாக சூரியனிடம் இருந்து சக்தியை பெற்று மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தார். 15 நாட்கள் தீவிர முயற்சிக்கு பின், இப்போது, ஒரு ரூ.500 நோட்டில் இருந்து 5 வோல்ட் மின்சாரம் தயாரிக்கிறார்.
இது குறித்து லச்மான் தண்டி கூறுகையில், “ செல்லாது என மத்திய அரசு அறிவித்த ரூ.500 நோட்டை வைத்து என்ன முடியும் என யோசித்தேன். அப்போது, அந்த நோட்டை கிழித்தபோது, அதில் சிலிகான் கம்பி இருப்பதை அறிந்தேன். அந்த சிலிகான் கம்பிகளை, ஒரு சிலிகான் பிளேட்டில் இணைத்து, சூரிய ஒளியில் வைத்து அதை ஒரு டிரான்ஸ்பார்மரில் இணைத்தேன். சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தியாகி, அதில் இருந்து 5 வோல்ட் வரை கிடைத்தது.
இது குறித்து நான் எனது கல்லூரியில் செயல்விளக்கம் கொடுத்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, நான் பிரதமர் அலுவலகத்துக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் எனது கண்டுபிடிப்பு குறித்து ஏப்ரல் 12-ந்தேதி கடிதம் எழுதினேன்.
எனது கண்டுபிடிப்பை பாராட்டிய பிரதமர் அலுவலகம் இம்மாதம் 17-ந்தேதி மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளை அனுப்பி எனது திட்டம் குறித்து அறிந்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
ரூ.500 நோட்டில் உள்ள சிலிகான் தகட்டின் மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்தை நான் கண்டுபிடித்த டிரான்ஸ்பார்மரில் சேமித்து பயன்படுத்தி வருகிறேன். எனது கண்டுபிடிப்புக்கு பிரதமர் அலுவலகம் பாராட்டியதை பெருமையாகக் கருதுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.