ரெயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி…. 2018ம் ஆண்டு மார்ச் வரை “அது இல்லையாம்!
2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு “சர்வீஸ் சார்ஜ்” (சேவைக் கட்டணம்) விதிக்கப்படாது என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்ேததி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடையைக் கொண்டு வந்ததில் இருந்து ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவுக்கு சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படாது எனக் கூறப்பட்டது.
மக்களிடம் டிஜிட்டல் ரீதியான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்த நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்தியது. இதன் மூலம், ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ. 20 முதல் 40 வரை மிச்சமானது.
இந்த சலுகை முதல்கட்டமாக கடந்த ஜூன் 30-வரை நீட்டிக்கப்பட்டு, அதன்பின் செப்டம்பர் 30-ந்தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
இது குறித்து ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு தளத்தை இயக்கும் ஐ.ஆர்.சி.டி.சிக்கு ரெயில்வே வாரியம் கடந்த மாதம் 29-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது அடுத்த2018ம்ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சர்வீஸ் சார்ஜ் பிடித்தம் செய்யக்கூடாது என ஆணையிட்டுள்ளது.
ரெயில்வேக்கு வரும் வருவாயில் 33 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மூலமே வந்து கொண்டு இருந்தது. இப்போது, அது மார்ச் வரை ரத்துசெய்யப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு டிக்கெட் முன்பதிவு மூலம் ரெயில்வேக்கு ரூ.1500 கோடி வருவாய் வந்ததில், ரூ.540 கோடி ஐ.ஆர்.சி.டி.சிக்கு வந்ததாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் 23-ந்தேதி முதல் 2017ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி வரை ரெயில் டிக்கெட் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்ததில், சர்வீஸ் சார்ஜ் மற்றும் சேவை வரியை ரத்து செய்ததால், ரூ.184 கோடி ஐ.ஆர்.சி.டி.சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை இன்னும் ரெயில்வேதுறை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.