பணம் தேவையே இல்லை, செல்போன் இருந்தால் போதும் என மோடி அதிரடியாக கூறினார்.
பஞ்சாப் மாநிலம், பதிந்தாவில் ரூ.926 கோடி மதிப்பில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி வைத்து பேசினார்.
அப்போது அவர் கள்ள நோட்டு ஒழிப்பு குறித்து பேசியதாவது:-
நமது நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை போன்று 4 மடங்கு எண்ணிக்கையிலான செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. பணம் செலுத்துவதற்கான வேலைகளுக்கு செல்போனை பயன்படுத்த மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
வங்கிகள் வழங்கும் ஆப்களை நீங்கள் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விஷயம் தெரியாத பொதுமக்களுக்கு, விபரங்கள் அறிந்த அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் செல்போனில் வங்கி பண பரிவர்த்தனை குறித்து பயிற்சி தர வேண்டும்.
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது, ஏழை மக்களுக்கு அவர்களது உரிமைகளை வழங்குவதற்குத்தான். ஊழல், கருப்புபணம் போன்றவற்றின் காரணமாகத்தான் நடுத்தர வர்க்கத்தினர் சுரண்டப்படுகின்றனர். ஏழை எளியோர் தங்கள் உரிமைகளை இழந்துள்ளனர்.
கருப்பு பண வியாபாரம், இந்த நாட்டை கரையான் போல சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. இதனால்,தான் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. புதிய நோட்டுகள் படிப்படியாக உங்களை வந்து சேரும். இந்த நடவடிக்கைகளால், பல்வேறு பிரச்சனைகளையும், அவதிகளையும் சந்தித்து வரும் மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் நேர்மையுடன் இந்த நடவடிக்கையில் இணைந்து நிற்கிறீர்கள்.
நான் உங்கள் ஆதரவை தேடுகிறேன். உங்கள் செல்போன், வெறும் செல்போன் அல்ல. அந்த செல்போனை நீங்கள் உங்கள் வங்கியாக மாற்றிக்கொள்ள முடியும். பணப்பையாக மாற்றிக்கொள்ள முடியும். இன்று உங்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இருந்தால், நீங்கள் சந்தைக்கு சென்று பொருட் களை வாங்க முடியும்.
செல்போன் வழியாக அதற்கான பணத்தை செலுத்த முடியும். பணத்தை தொடாமல் உங்கள் தொழிலை நீங்கள் செய்ய முடியும்.
கள்ள நோட்டுகள், நமது இளைஞர்களை அழித்திருக்கிறது. நமது இளைஞர்களை காப்பதற்கு, கருப்பு பணத்துக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்தியா ஒரு மாபெரும் நாடாக ஆவதற்கு, இந்த நடவடிக்கையில் உங்களது முழுமையான ஆதரவை நான் நாடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
