nithish kumar apologize to lallu

ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு எதிராக தற்போது தான் எடுத்துள்ள முடிவுக்கு லாலுவிடம் நிதிஷ்குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகாரில் அரங்கேறிய அரசியல் நாடகம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆட்சியில் இருந்து நிதிஷ், துணை முதலமைச்சரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி மீதான ஊழல் புகாரால் பதவி விலக வலியுறுத்தினார். 

ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து பீகார் மாநில முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் திடீரென ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சியை கைப்பற்றினார்.

இது பீகார் மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம் என்றும், தன் மீதான கொலைப் பழியை அழிக்கவே பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததாகவும் லாலு குற்றம்சாட்டினார். 

இந்நிலையில் நிதிஷ் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு, லாலுவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். 

அப்போது அவர், தன்னை மன்னித்து விட வேண்டும் என்றும், 20 மாதங்களாக தொடர்ந்த அரசை இனியும் தொடர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.