கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே ராமமோகனராவின் வீட்டில் வருமான வரிசோதனை….நிர்மலா சீத்தாராமன் தகவல்…
உயா் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்குப் பின்னா், வருமானத் துறையினர் முக்கிய நபா்கள் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

131 கோடி ரூபாய் பணத்தில் 34 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும். ரூபாய் நோட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் 34 கோடி ரூபாய் புது நோட்டுகள் எப்படி வந்தது என்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், சசிகலாவின் குடும்பத்தினருக்கும் சேகர் ரெட்டியுடன் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வங்கி அதிகாரிகள் மட்டும் அல்லாமல் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தற்போது அண்ணா நகரில் உள்ள ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாக தெரிவித்தார். இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
