தமிழில் பெயர்ப் பலகை எழுதவேண்டும்... ரயில் நிலையங்களில் மத பிரசாரம் கூடாது... குரல் எழுப்பிய ஆசீர்வாதம் ஆசாரி
புது தில்லியில் உள்ள ரயில்வே அமைச்சகமான ரயில் பவனில், இன்று காலை ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளைக் கூறினர். ரயில்வே துறை சார்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த முடிவுகளுடன் இந்தக் கூட்டத்தில் தங்கள் கருத்துகளை உறுப்பினர்கள் முன் வைத்தனர்.
பொதுவாக ரயில் நிலையங்களில் உள்ள குறைபாடுகள், ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள், குடிநீர், உணவு, தங்கும் அறை உள்ளிட்ட பல வசதிகள் குறித்த புகார்கள் இவை விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக.,வைச் சேர்ந்தவரும் ரயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினருமான ஆசீர்வாதம் ஆச்சாரி, தமிழகத்தில் தாம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மத ரீதியான மேடையாகவும் பிரசார மேடையாகவும் ரயில் நிலையங்களை பலர் பயன்படுத்துவதை எடுத்துக் கூறினார்.
இது குறித்து அவர் தெரிவித்த போது,
சென்னையின் புறநகர் ரயில்களில் கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் பயணிகளிடம் தங்கள் மதத்தைப் பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதைத் தடை செய்ய வேண்டும். ரயில்வே நிலையங்களிலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதே போல், அண்மையில் இடதுசாரி அமைப்பைச் சார்ந்தவர்களும் தங்கள் இயக்கம் குறித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.
உடனடியாக இவ்விரு நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், "என் தலைமையில் ஹிந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து பஜனை நிகழ்ச்சிகளை ஒடும் ரயில்களில் மற்றும் நடைமெடைகலிலும் நடத்துவோம் என்றும், இதற்காக என்னைக் கைது செய்தால் சிறை செல்லவும் தயார்" என்றும் எச்சரித்துள்ளேன் என்று கூறினார்.
தாம் இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக பின்வாங்கப் போவதில்லை என்று கூறிய அவர், கடந்த வாரம் பழைய தில்லி ரயில் நிலையத்தில், நடைமேடை 4 மற்றும் 5ல், தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் கயிறு கட்டி யாரையும் நடைமேடையில் நடக்கா வண்ணம் செய்ததையும், அதை எதிர்த்து அதிகாரிகளை நான் எச்சரித்த பின்பு, அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையும் எடுத்துக் கூறி, ரயில் நிலையங்கள் தொழுகைக் கூடங்களாக மாறாமல் இருக்க, நாடு முழுவதிலும் நடைமேடைகளிலிருந்து இத்தகைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இதை நான் நேரில் கண்காணிப்பேன் என்றும் கூறியுள்ளேன் என்றார்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தமிழ்ப் பெயர்ப்பலகை பற்றிய பிரச்னையைக் குறிப்பிட்ட அவர், புதுக்கோட்டை ரயில் நிலைய முகப்பில் எழுதப்பட்டுள்ள பெயர் பலகை உடனடியாக மீண்டும் தமிழில் எழுதப்பட வேண்டும். ஏற்கனவே தமிழ் மொழியில் இருந்த பெயர்ப் பலகையை அழித்து ஹிந்தி மொழியில் எழுதிய அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
ஆசீர்வாதம் ஆச்சாரி, முன்னர் 2ஜி புகழ் அ.ராசாவுக்கு அமைச்சக உதவியாளராக அரசுப் பணியில் இருந்தவர் என்பதும் பின்னாளில் அவர் பாஜக.,வில் இணைந்ததும் குறிப்பிடத் தக்கது.