ஃப்ராடு நிறுவனங்களின் இயக்குனர்கள் லிஸ்டில் சசிகலா... டாப் 10 லிஸ்டில் யார் யார் இருக்காங்கன்னு தெரியுமா?!
போலியாக நிறுவனங்களை நடத்தி நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட இயக்குனர்கள் பட்டியலை மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ஆச்சரியப் படும் விதத்தில், நாட்டில் தமிழகத்தில்தான் அதிக அளவிலான போலி நிறுவனங்கள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதிலும், சசிகலாவுக்குச் சொந்தமான கம்பெனிகள் என சில அடையாளம் காட்டப்பட்டு, போலி நிறுவனங்கள் என குறிப்பிடப் பட்டுள்ளன.
முன்னதாக 2.09 லட்சம் பதிவுசெய்யப்படாத கம்பெனிகள் இயங்குவதாகக் கூறி, அவற்றின் உரிமைகளை அதிரடியாக ரத்து செய்தது அரசு. இவற்றில், இயக்குனராக நீக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் சென்னையில் தான் அதிக பட்சமாக 24,048 நிறுவனங்கள் இருந்தனவாம். ஆமதாபாத்தில் 12,692, எர்ணாகுளத்தில் சுமார் 12,000, கட்டாக்கில் 4,760, ஷில்லாங்கில் 670 என இந்தப் பட்டியலில் போலி நிறுவனங்களின் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது. மேலும், பெங்களூரு, சண்டிகர், சட்டீஸ்கர், தில்லி, கோவை, கோவா, குவாலியர், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கோல்கத்தா, பாட்னா, மும்பை, புதுச்சேரி ஆகிய நகரங்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இவ்வாறு உரிமை ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களான ஃபேன்சி ஸ்டீல்ஸ் பிரைவைட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும் சசிகலாவின் பெயரில் இருந்தவை.
இவ்வாறு போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலில் கேரள முதல்வரான மிஸ்டர் எளிமை எனப் பெயரெடுத்த உம்மன்சாண்டியும் இடம் பிடித்துள்ளார்.
போலி நிறுவனங்கள் என ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள் பெயர்களையும் வெளியிட்டுள்ளது அரசு.
இந்தப் பட்டியலில் சசிகலா, உம்மண் சாண்டி ஆகியோருடன், ரமேஷ் சென்னிதாலா, தொழிலதிபர் யூசுப் அலி உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.