monthly styphend for TB patients

காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சத்துள்ள உணவுகளை வாங்குவதற்காகவும், அவர்களின் மருத்துவமனை போக்குவரத்து செலவுக்காகவும் மாத உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாட்டில் இப்போது, 25 லட்சம் காசநோயாளிகள் உள்ளனர். அவர்கள் சத்தான உணவுகளை வாங்குவதற்காகவும், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து செல்வதற்காகவும் மாத உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக செலவுத் தொகை திட்டத்தை, நிதி அமைச்சகத்துக்கான செலவுக் குழு ஒப்புக்கொண்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை 90 சதவீதமாகவும்,2030ம் ஆண்டுக்குள் 95 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

அதன் ஒரு பகுதியாக காசநோயாளிகள் சத்தான உணவுகள், போக்குவரத்து செலவுக்காக மாதம் ரூ. 500 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. நோயாளிகளின் ஆதார் எண், மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில் இது வழங்கப்படும்.

இப்போதுள்ள சிகிச்சை முறையின்படி, காசநோயாளிகளுக்கு 3 அல்லது 4 மருந்துகளின் கலவையை ஒரு மருந்தாக தரப்படுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் எளிதாக சாப்பிடும் வகையில், மாத்திரையாக அல்லாமல், சுவையூட்டப்பட்ட திரவ மருந்துகளாக தரப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.