Modi speech

ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு தொடர்ந்து எடுக்கும் என்றும் ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்களை தப்பவிட மாட்டோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடப் பேசினார்.

இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநிலம், தேவ பூமி, வீர பூமி. சுற்றுலா தலங்கள் நிறைந்த பூமி. இங்கு சாலைகள், ரெயில்வே, விமான வழித்தடம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது என தெரிவித்தார்.

தற்போது காலம் மாறிவிட்டது என்றும் . உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அடித்த காற்று, இமாசலபிரதேசத்தில் நுழைந்து விட்டது. டெல்லியில் இருந்தும் புதிய காற்று வீசி வருகிறது. எனவே, இமாசலபிரதேசம் நேர்மையான சகாப்தத்துக்கு தயாராகி வருகிறது என மோடி தெரிவித்தார். 

முதலமைச்சர் வீர்பத்ர சிங் , வழக்குகளுக்காக தன்னுடைய வக்கீல்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவழித்து வருகிறார். அவரால் மக்களுக்கு எப்படி பாடுபட முடியும்? என மோடி கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்றும், ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்களை தப்பவிட மாட்டோம் என்றும் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.