முந்தைய அரசு கூட்டணிக் கட்சிகளுடன் பேரம் பேசவே ரயில்வே துறையை பயன்படுத்தியது… பிரதமர் மோடி கடும் தாக்கு….

ஆளுங்கட்சியிடம் கூட்டணி கட்சிகள் பேரம் பேசுவதற்கான கருவியாகவே ரயில்வே துறையை முந்தைய அரசுகள் பயன்படுத்தி வந்த நிலையில், தமது அரசுதான் அத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் மோடி ​தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகர் ரயில் நிலையத்தை 250 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி மோடி பேசினார். மத்திய அரசில் இணைய வேண்டுமெனில், ரயில்வே துறையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஆளும் கட்சிக்கு கூட்டணிக் கட்சிகள் நிபந்தனை விதிக்கும் நிலைதான் இதற்கு முன்பு இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார். 

ரயில்வே துறையை கேட்டுப் பெறும் கட்சிகளின் தலைவர்கள், அதனை மேம்படுத்த வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், அவர்களின் விருப்பம் எல்லாம், எதில் இருந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றும் மோடி குறிப்பிட்டார்.

தற்போது ரயில்வே துறையை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், ரயில்வே பட்ஜெட் தொகை, இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு ரயில்வே அமைச்சர்களாக நியமித்ததையே மோடி மறைமுகமாக சாடியுள்ளார்.