தீவிரவாத செயல்களுக்காக மதுரையில் ரூ.25 கோடி வரை, வாலிபர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் பழைய நோட்டுகள் மாற்றப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் உள்பட 22 முக்கிய தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மைசூர் குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் மதுரையிலும், ஒருவர் சென்னையிலும் சிக்கியுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மதுரையை மையமாக வைத்து அல்கொய்தா தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. எனவேதான், டெல்லி தேசிய புலனாய்வுப்பிரிவு போலீசாரின் 13 தனிப்படையினர் கடந்த 27ம் தேதியில் இருந்து மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லி, சென்னை, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டிருப்பது இதுதான் முதல்முறை. மூளைச்சலவையால் மதுரை வாலிபர்கள் தீவிரவாத செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த வாலிபர்தான், சென்னையில் கைதானவர். தீவிரவாத செயல்களுக்கு செலவு செய்ய பல கோடி ரூபாய் பணம் மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை மாற்றுவதற்கு, மதுரையை மையமாக வைத்த கும்பல் ரூ.25 கோடி வரை வாலிபர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாத கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலரை கண்காணித்து வருகிறோம். மேலும், கைதான அப்பாஸ் அலி மற்றும் 2 பேரிடமும் அல்கொய்தா தொடர்புடன், பிரதமர் உள்ளிட்ட 22 முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பது குறித்த விசாரணையை வேகப்படுத்தியுள்ளோம். விசாரணை முடிவில், மிகப்பெரிய சதித்திட்டம் குறித்த விபரங்கள் வெளிவரும் என்றனர்.
